Tuesday, September 22, 2009

ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி


ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி

மா_தவி


2009 ஜூலை 6 ஆம் தேதியன்று திரு.கி.வீரமணி அவர்கள் தஞ்சையில் உள்ள பெரியார் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகி விட்டது. விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் போர் புரிகிறோம். மக்களுக்க்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார். விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாகச் சொல்லும் ராஜபக்சே தங்களின் சொந்த இடங்களுக்குத் தமிழர்களைச் செல்ல விடாமல் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாகப் பிரித்து வைத்து இருப்பது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. தமிழகப் பெண்களை சிங்கள ராணுவம் விபச்சாரம் செய்ய வற்புறுத்துகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் ச்சுதந்திரமாக செயல்படவிடாமல் அப்படியே 10,15 ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது” என்றார் .

இந்தப் பேட்டி வெளியான ஒரு வாரத்தில் - ஜூலை 15 ஆம் தேதியன்று - திரு.கி.வீரமணி அவர்கள் வேந்தராக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் (Construction Industry Development Council – CIDC) தலைமை இயக்குனரான திரு.பி.ஆர்.ஸ்வரூப் அவர்களை வரவேற்க அது காத்திருந்தது. சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டிப்ளமோ படிப்பினைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடங்குவதற்கான ஒப்பந்ததத்தை CIDC அமைப்பு அன்றைய தினம் செய்து கொண்டது.

இதனை அடுத்த ஒரு வாரத்தில் - அதாவது ஜூலை 22 ஆம் தேதியன்று - வெளியான செய்தியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது. தஞ்சையில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் டிப்ளமோ படிப்பை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அதே CIDC அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது என்ற செய்தியே அந்த அதிர்ச்சிக்கான காரணம். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான “வட்டக்கின் வசந்தம்” திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருந்தது.

முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் படும் துன்பங்களை நினைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வருகிறது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் வேந்தருமான திரு.வீரமணி, ஏனோ இலங்கை அரசுடன் தங்கள் பங்காளியான CIDC அமைப்பு கூட்டு சேர்ந்து கொண்டதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

CIDC என்ற இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் மெய்க்காப்பாளனும் அதன் சதியும் :

மத்தியத் திட்டக் கமிஷனானது இந்தியக் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து CIDC என்ற அமைப்பினை 1996 ஆம் ஆண்டில் உருவாக்கியது. உலகமயமாதல் கோட்பாட்டின் செயல்பாடுகளால் 1990 -களில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருந்த இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களைக் காப்பாற்றுவதே CIDC அமைப்பினை மத்தியத் திட்டக் கமிஷன் உருவாக்கியதற்கான முதண்மைக் காரணமாகும். இந்தியக் கட்டுமானத் துறையின் திறனை மேலை நாடுகளின் திறனுக்கு இணையாக மேம்படுத்துவதே CIDC யின் அடிப்படை நோக்கம். இந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் அளிப்பதே CIDC யின் பணி.

இந்தியாவின் கட்டமைப்புத் துறை தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும் தீட்ட மத்திய அரசுக்கு அது உதவுகிறது.உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டுமான ஒப்பந்தங்களையும், வழிமுறைகளையும் நெறிமுறைப் படுத்துவதிலும் அது ஈடுபடுகின்றது. அந்த நிறுவனங்களுக்கு அவசியமான பணிநயம் மிக்கத் தொழிலாளர்களையும், இடைப்பட்ட தளத்தில் செயல்படுகின்ற நிர்வாகிகளையும் உருவாக்கும் பணியையும் அது மேற்கொள்கிறது. தொழிலாளர்களின் நலத்தைப் பேணும் திட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அனைத்து ஒப்பந்தகாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஒப்பந்தங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் பணியையும் அது மேற்கொள்கிறது. கட்டுமானத் துறைக்கான நிதி தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது. கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் அனைத்துக் க்ருத்து வேறுபாடுகளையும் சமபந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேசித் தீர்க்கும் மத்தியஸ்தப் பணியையும் அது மேற்கொள்கிறது. இந்தியக் கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் கட்டுமான எந்திரங்களின் வங்கி ஒன்றினை அமைக்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும் அறிந்துகொண்டு அவற்றை இந்தியக் கட்டுமானத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்தியக் கட்டமைப்புத்துறையின் மெய்க்காப்ப்பாளனாக செயல்படுகின்ற CIDC தன் கல்விப் பணிகளை மேற்கொள்வதற்காக Construction Industry Professional Training Council (CIPTC) என்ற கல்வி அமைப்பை 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் ”இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழக்த்துடன்” இணைந்து ரூர்கி , புனே மற்றும் பெங்களூரு-வில் உள்ள இராணுவ மையங்களில் உள்ள இராணுவப் பணியாளர்களுக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெகானிக்கல் துறைகளில் டிப்ளமோ பட்டப் படிப்புகளை அளிக்கும் பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தியது. அடுத்து ஹரியானா மாநிலத்தின் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதற்காக ஹரியானா மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி மையத்துடன் இணைந்து அந்த மாநிலத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் உயர் டிப்ளமோ படிப்புகளை அது ஏற்படுத்தியது. தற்போது சர்வதேச அளவில் இந்த டிப்ளமோ படிப்புகளைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக்த்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பட்டயப் படிப்புகளை அது உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டயப் படிப்புகளை இந்தியா முழுவதும் வழங்குவதற்காக பலநூறு பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி மையங்களை CIDC யானது பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகை செய்துள்ளது.

இந்தப் பட்டயப் படிப்புகளை இந்திய அளவில் எடுத்துச் செல்வது மட்டுமே CIDC யின் நோக்கம் அல்ல. சர்வதேச அளவில் இதனை உடனடியாக எடுத்துச் செல்வதுவே அதன் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. .

இந்தக் குறிக்கோளின் முதல் கட்டமாக இந்தப் பட்டயப் படிப்புகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் CIDC இன்று ஈடுபட்டுள்ளது. 2009 ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று இலங்கை அரசின் கட்டுமானத்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற நிறுவனத்துடன் CIDC நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இலங்கையின் கட்டுமான நிறுவனங்களுக்கு அதிநவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களை வழங்க வழி செய்யும். இந்தக் கூட்டுறவு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அதில் இரண்டுபேர் ICTAD நிறுவனத்தில் இருந்தும், இருவர் CIDC நிறுவனத்தில் இருந்தும் நியமிக்கப் படுவர். இந்தக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்தின் தலைமை அதிகாரியான நிசங்கா என்.விஜரெத்னெ இருப்பார்.

இந்த ஒப்பந்தமானது யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் வெள்ளவத்தை ஆகிய நகரங்களில் கட்டுமானத் துறையில் பங்கெடுப்பதற்குத் தேவையான நவீனப் பயிற்சிகளை வழங்கிடும் மையங்களை அமைத்திட CIDC-க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களின் மூலமாக சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வன்னிப் பகுதியில் எடுக்கப்படவிருக்கின்ற கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மேஸ்திரி, சோதனைக்கூட ஆய்வாளர், கொத்தனார், தச்சர், குழாய்ப் பணியாளர், வெல்டர்களாக உருவாக்கப் படுவார்கள்.

ஆக, வன்னி நிலத்திறகான சிங்கள அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்குத் தேவையான கூலிப் பட்டாளம் ஒன்றை வன்னியைத் தவிர்த்த ஈழத் தமிழ் மக்களில் இருந்து உருவாக்கிடும் முயற்சியில் CIDC ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்துடன் CIDC ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்திற்கான நிகழ்வில் பல்கலைக்கழக்த்தின் வேந்தரான திரு.கி.வீரமணி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்: “சிந்தனை செய்! கண்டுபிடி! மாற்று! என்பதே பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் குறிக்கோள்களாகும். சிந்தனை செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துவதற்கும், இதன் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் கட்டுமானப் பொறியியல் துறையானது நிறைய வாய்ப்பைக் கொடுக்கிறது”. அவர் கூறிய கருத்துக்களையே CIDC அமைப்பானது ராஜபக்சா அரசுடன் சேர்ந்து கொண்டு வன்னி நிலத்தில் இன்று செயல்படுத்தப் பார்க்கிறது என்பதுதான் வேடிக்கை!
CIDC யின் பாடங்களைத் தமிழில் தரும் இந்தியாவின் ஒரே பல்கலைக் கழகமாக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இந்த சதியில், தெரிந்தோ தெரியாமலோ, CIDC -யின் பின்னால் செல்லத் தொடங்கியிருக்கிறது.

CIDC இலங்கை அரசியலலுக்குள் நுழைந்த கதை :

சிங்கள இராணுவம் கிளிநொச்சியை 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று ஆக்கிரமித்தது. கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் உள்ள சாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது அதன் பிறகு எறிகணை மழையை அது பெய்யத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கானோர் இந்தத் தாக்குதலுக்குப் பலியாயினர். இப்படிப்பட்ட தாக்குதல் அதிக அளவில் தொடர்ந்து கொண்டிருந்த பிப்ரவரி மாத இறுதியில் போருக்குப் பிந்தைய இலங்கையில் முதலீடு செய்வதை ஆராய்வதற்காக உயர்மட்டத் தொழில்துறைக் குழு ஒன்று சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தது. சீனாவிடம் இருந்து மன்மோகன் சிங் அரசின் எதிர்ப்பை மீறி 2007 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ராஜபக்சா அரசால் வெற்றிகரமாக வாங்கப்பட்ட JY-11 என்ற சீன ராடார் சீனர்களாலேயே இயக்கப்படப்பட்டு வந்த மிரிகாமா நகரத்தை அந்தக் குழு பார்வையிட்டது. அந்த நகரமே தமது நிறுவனங்களை எதிர்காலத்தில் அமைப்பதற்கு உகந்த இடமாக இருக்கும் என்று அது அறிவித்தது.

அந்தக்குழு இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குள்ளாகவே - அதாவது மார்ச் 5 ஆம் தேதியன்று- இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் தனக்கு 190 கோடி டாலர் கடன் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்திய அரசை உஷார் படுத்தின. இலங்கையில் போர் முடிவுக்கு வரப்போவதையே அவை கட்டியம் கூறுவதாக இருந்தன. போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்தியா எப்படிப்பட்ட பணிகளை எடுக்க வேண்டும் என்ற விவாதங்கள் இந்திய அரசினால் இதன் பின்னரே முன்னெடுக்கப் பட்டன. அவ்வாறு முன்னெடுக்கப் பட்ட விவாதங்களில் CIDC முக்கியப் பங்கை ஆற்றத் தொடங்கியது.

”விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுதுமாக அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளின் பின்னால் உறுதியுடன் நிற்கும்” என்று ஏப்ரல் 22 ஆம் தேதியன்று சீன அரசு அறிவித்தது. அடுத்த நாளே இலங்கையின் நிலவரம் என்ன என்பதை அறிந்து வர எம்.கே.நாராயணனையும், சிவ சங்கர மேனனையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. ”குழம்பிய இலங்கையில் ஆதாயம் தேடப் பார்ப்பதாக”ச் சீனாவின் மீது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குற்றம் சாட்டினார். அதே தேதியன்று இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.

போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.

சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின. இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.

ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார். சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.

ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.

இப்படிப்பட்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த CIDC அமைப்பே கூடுதலாகப் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தைத் தன் 90 ஆவது உறுப்பினராக சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடு பட்டு வந்தது. ஜூலை 15 ஆம் தேதியன்று அதில் வெற்றியும் அடைந்தது.

கி.வீரமணி அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ?

சமூக நீதியின் காவலரான பெரியார் அவர்களின் பெயரைத் தாங்கிய ஒரு நிறுவனமானது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருப்பதை சுய மரியாதை உணர்வு கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கை அரசு முன்வைத்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக ஜூன் மாதத்தில் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் தடபுடலாகப் பேசினார். ஆனால் தமிழர்களுக்கு எதிராக அங்கு நிலவும் அநீதியான சூழ்நிலையை ”நாம் தமிழர் இயக்கம்” அவரிடம் எடுத்துரைத்த போது, , அதனை எவ்விதத் தன்முனைப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட அவர் “இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை தமிழர்களை மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை முன் வைக்கும் இந்தியத் தொழில்நுட்பக் குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று ஆகஸ்டு 6 ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.

வேளாண் துறையில் வன்னிப் பெண்டிரைப் பயிற்றுவிப்பதே இந்திய அரசு அமைத்திருக்கும் வேளாண் தொழில்நுட்பக் குழுவின் நோக்கமாகும். கட்டுமானத் துறையில் 70 ஆயிரம் இளைஞர்களைப் பயிற்றுவிக்க ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று CIDC அமைப்பு இலங்கையின் ICTAD அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மேற்கூறிய வேளாண் தொழில்நுட்பக் குழுவைப் போன்றதொரு அமைப்பையே கட்டுமானத் துறையில் அமைக்கவிருக்கிறது. அந்த அமைப்பின் ஒரு அங்கமாகவே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உள்ளது .

இந்த சூழ்நிலையில் தலைவர் கி.வீரமணி அவர்களும் , பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் :

  • போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். வன்னி மக்களுக்காகப் போரின்போது தன்னலம் பாராது உழைத்த மருத்துவர்கள் இன்று இலங்கை அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
  • முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்குக் காரண்ம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. தமிழர் இல்லை.
  • ஆயிரக்கனக்கான ஆண்டுகளாகத் தமிழர் பூமியாக இருந்த வன்னிப் பெருநிலத்தில் 87 விழுக்காடு நிலம் அரசுக்கு சொந்தமானது என்று ராஜபக்சா அரசு தடாலடியாக அறிவித்துள்ளது. எனவே, அந்த நிலங்களில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது.
  • வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய எந்தவொரு திட்டத்தையும் மேலிருந்து திணிக்கக் கூடாது. இன்று CIDC மேற்கொண்டிருக்கும் திட்டம் வன்னி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் எதேச்சதிகார சிங்கள அரசால் மேலிருந்து திணிக்கப்படும் திட்டமேயன்றி வேறல்ல.


கி.வீரமணி அவர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனால் எடுக்கப்பட்ட முடிவைப் போலவே வன்னி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை அரசின் திட்டங்கள் எதிலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்து கொள்ளக்கூடாது. மேலும் அதே முடிவினை CIDC யும் எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் வற்புறுத்த வேண்டும்.

நீதிக்கான அந்த முடிவை ஏற்க CIDC அமைப்பு தவறினால் அந்த அமைப்பில் இருந்து (டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் வேளாண் தொழில்நுட்பக் குழுவில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்டது போல) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் விலகுவதாகப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

கூடுதலாக, CIDC யில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரிடமும் தமிழர்களுக்கெதிரான CIDC யின் தவறான செயல்பாட்டினை எடுத்துரைக்கக் கி.வீரமணி அவர்களும், அவர்தம் பல்கலைக் கழகமும் முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் CIDCயின் உறுப்பினர்களாக உள்ளன. எடுத்துக் காட்டாக: L&T, Hindustan Construction Company, GVR Infrastructure Ltd., Maytas Infra Ltd., Afcons Infrastructure Ltd., Lanco Infra Ltd., DLF Universal Ltd, Shapoorji Pallonji Ltd., Som Dutt Builders Ltd., ACC Cements, Unitech, Tarapore&Co, SMS Infrastructures Ltd, Saint Gobain Glass India Ltd., SEW Construction Ltd., Umak Investment Ltd., IL&FS, HDFC, Builders Association of India (BAI) போன்ற கட்டுமானத்துறை சார்ந்த CIDC உறுப்பினர்கள் பலகாலமாக தொழில் செய்து வருகின்றனர்.

”தயை கூர்ந்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதீர்கள்” என்பதை அவர்களிடம் வலியுறுத்தி, ”CIDC அமைப்பானது இலங்கை அரசுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தினைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை செயல்படுத்தக் கூடாது” என்ற கோரிக்கைக்குத் தோள் கொடுக்க அவர்களிடம் கி.வீரமணி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

தமிழ் இனத்தின் சமூக நீதிக்கான இந்த முடிவுகளைத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் உடனடியாகக் கைகொள்ள வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் இனத்தை எதிரியின் அநீதிக்கான சதியில் மூழ்கடிக்கும் காலம் என்பதை அவர் உணர வேண்டும்.

source: http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html